பள்ளிவாசல்களுக்கு வருகின்ற ஏப்ரல் 19ம் தேதிக்குள் நோன்புக் கஞ்சிக்கான அரிசி வழங்கப்படும்: தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி

கொரோனா தொற்றை தடுப்பு நடவடிக்கையின் ஊரடங்கு உத்தரவை கருத்தில் கொண்டு இந்த அரிசியை எப்படி வழங்குவது, இதை பள்ளிவாசல்கள் எப்படி பயன்படுத்துவது பற்றி கடந்த ஓரிரு நாட்களாக இஸ்லாமிய சமயத்தை சார்ந்த பிரதிநிதிகளுடன் பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டோம். பல்வேறு சமய பிரதிநிதிகள் மற்றும் இஸ்லாமிய சமயத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதன் அடிப்படையில் பல்வேறு ஆலோசனையில் ஈடுபட்டு வந்தோம்.

அதாவது வழங்க வேண்டிய அரிசியை வருகின்ற ஏப்ரல் 19ம் தேதிக்குள் பள்ளிவாசல்களுக்கு நாங்கள் நேரடியாக வழங்கி விடுவது என்றும் அதை பிரித்து தகுதியான குடும்பங்களுக்கு சிறு சிறு பைகளில் தன்னார்வலர்களின் உதவியோடு மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடு அந்த குடும்பங்கள் இருக்கின்ற வீடுகளிலேயே அவற்றை வழங்குவது என்ற கருத்தை சமய தலைவர்கள் முன்னிலையில் தெரிவித்தோம்.

ஏனென்றால் ஒரு சிலர் கஞ்சி தயாரித்து அதை வழங்குவதாக தெரிவித்தனர். நாங்கள் அதில் உள்ள இடர்பாடுகளை நங்கள் எடுத்துரைத்தோம், தன்னார்வலர்கள் தினந்தோறும் அவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதற்காக ஏதேனும் அறிகுறி இருந்து நோய் தொற்று ஏற்பட அபாயம் உள்ளதாக தெரிவித்து அதை தவிர்க்க வலியுறுத்தினோம். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் காலகட்டத்தில் இந்த வழிபாடுகள், சமய கூட்டங்களை அறவே ஒதுக்கி தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது ஒன்று தான் வழி என்று நாங்கள் எடுத்துரைத்த அடிப்படையில் அதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இதனையடுத்து வருகின்ற 19-ம் தேதிக்குள் பள்ளிவாசல்களுக்கு வழங்க வேண்டிய 5,450 மெட்ரிக் டன் அரிசி, பச்சை அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு விடும். அவர்கள் அதை 22-ம் தேதிக்குள் தகுதியான குடும்பங்களுக்கு வீடுகளுக்கே சென்று கொடுப்பது என்ற முடிவை அவர் எடுத்துள்ளனர்'என்று அவர் தெரிவித்தார்.